என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Monday, August 9, 2010

கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-5)

(சிதிலமடைந்த ராஸ் தீவின் ஒரு குடியிருப்பு)
இதுவரை
பாகம்-4                                                                    

எங்கள் உடைமைகளை எல்லாம் காப்பறையில் வைத்து பூட்டி விட்டு அவரவர் இருக்கைக்கு சென்றோம் அது இரயில் வண்டியில் இருப்பது போல மூன்றடுக்கு படுக்கை, ஒரு பெரிய ஹாலில் சுமார் 150 பேர் தங்கும் அளவுக்கு நெருக்கமாக அமைக்கப் பட்டு இருந்தது. கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளின் அவலங்கள் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். விரிவான விளக்கத்திற்கு இந்த வலைத்தளத்தை காணவும் (http://www.travelblog.org/Asia/India/Andaman-and-Nicobar-Islands/Port-Blair/blog-481773.html).  
இருப்பினும் நாங்கள் எங்கள் கப்பல் பயணத்தை மிகவும் ரசித்து அனுபவித்தோம். கரை மறைந்து ஆழக்கடலில் செல்லும் போது நீலக்கடலின் அமைதியும் எப்போதாவது தொலைவில் கடந்து செல்லும் மற்ற கப்பல்களை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் விவரிக்க இயலாதவை. எங்களுடன் இதே பயிற்சிக்காக பிற பல்கலையிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர்.
மொத்தம் பத்து பேர் இவ்வாறு கப்பலில் இருந்தோம்.கப்பல் பயணத்தின் போது ஒவ்வாமையால் அவ்வப்போது ஏற்படும் வாந்தியும், ஒருவருக்கொருவர் அறியாமல் சென்று வாந்தி எடுத்து விட்டு அடுத்தவரின் ஒவ்வாமையை கிண்டல் செய்வதுமாய் மகிழ்ச்சியாக நாட்கள் கழிந்தன. இரண்டு இரவுகள் கப்பலில் கழிந்து மூன்றாம் நாளில் அந்தமானை நெருங்கினோம்.
அந்தமானின் தலைநகரான நிக்கோபர் சென்று அடையும் முன் கார்நிக்கோபர் தீவுக்கு சென்று அதன் பயணிகளை இறக்க வேண்டும். அந்த இடத்தில் பவளப்பாறைகள் அதிகம் என்பதால் 10° சானல் எனும் ஒரு குறுகிய கால்வாய் வழியே பயணிக்க வேண்டும். கைதேர்ந்த மாலுமிக்கே அது சவாலான விஷயமாம் அதுவும் குறிப்பாக புயல் காலங்களில் சொல்லவே வேண்டாம்.
சரியாக கப்பல் அந்த இடத்தை அடையும் முன் புயல் அறிவிப்பு வெளியிடப் பட்டது. கப்பலால் நிர்ணயித்த திசையில் பயணிக்க இயலவில்லை. மாலுமியும் கப்பலை அந்த வழியில் இயக்குவது இயலாது என அறிவித்து கடலின் ஆழமான பகுதிகளில் சுற்ற துவங்கினார். சும்மாவே வாந்தி மயக்கத்தில் இருந்த பயணிகளுக்கு பேதியும் இலவச இணைப்பாய் இணைந்து கொண்டது. பொது கழிவறை "நிறைந்து வழிந்தது". ஊழியர்கள் அதை சுத்தம் செய்வதும், பயணிகள் பாதையெங்கும் நாறடிப்பதும், வாடிக்கையான வேடிக்கைகள்.
ஒரு வழியாக புயல் அமைதியானது. இவ்வளவு சீக்கிரம் அது நிலைக்கு வந்தது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம். கார்நிக்கோபர் சென்று பின் நிக்கோபர் துறைமுகத்தை அடைந்ததும் வழக்கம் போல கஸ்டம்ஸ் பரிசோதனைகள் எல்லாம் முடிந்து வெளியேறினோம். மூன்று நாட்கள் தண்ணீரின் தாலாட்டில் இருந்ததால் எங்கள் கால்கள் இன்னும் தள்ளாடுவதை உணர முடிந்தது.
அந்தமானில் வனப் பகுதிகளும் அதில் ஆதிவாசிகளும் அதிகம் என்பதால் அவை முழுவதும் வனத்துறையினரின் கட்டுபாட்டில் இருக்கும். எங்களுக்கு இந்த பயிற்சியை ஒருங்கிணைப்பு செய்து நடத்தியது வனத்துறையினர் என்பதால் எங்கு சென்றாலும் ராஜபோக உபச்சாரம் தான். அதை கப்பலில் இருந்து இறங்கியதுமே உணர்ந்தோம், எங்கள் வலிகள் எல்லாம் அதை கண்டு பறந்தன.
புதிதாக கட்டப்பட்ட ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதன்முதலில் அதில் நாங்கள் தான் தங்கினோமாம். குளிரூட்டப்பட்ட புத்தம் புதிய அறைகள், ஸ்பிரிங் மெத்தைகள், பளபளக்கும் மார்பிள்கள் பதித்த பாத்ரூம் என எங்கு பார்த்தாலும் பணத்தை இறைத்து கட்டப் பட்டு இருந்தது. எங்கள் கப்பல் பயணத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்ததும் எங்களையும் அறியாமல் சிரிப்பு வந்தது. எங்களை சற்று இளைப்பாற சொல்லி, மாலை சிற்றுண்டி முடித்ததும் ஊரை சுற்றிக் காட்டினார்கள்.
எங்கு பார்த்தாலும் தமிழர்கள், குறிப்பாக இராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகாரர்கள். இந்தி ஆட்சி மொழியாக இருந்தாலும் வணிகத்தில் தமிழர்களின் ஆதிக்கமே அதிகம். நம்ம ஊர் தேநீரையும் மசால் வடையையும் மிகவும் ரசித்து அருந்தினோம். நம்மை அடையாளங்கண்டு "எந்த ஊர் தம்பி? அட நம்ம பக்கத்து ஊரு!" என உரிமை பாராட்டிய கடைக்காரர்களையும், டாக்சிக்கு ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிய ஓட்டுனர்களையும், போக்குவரத்து காவலர் இல்லாத இடத்திலும் சிக்னலை மதித்து செல்லும் வாகன ஓட்டிகளையும் பார்த்து வியந்தோம். நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா? என அடிக்கடி கிள்ளி பார்க்கத் தோன்றியது.
கோவா போல இதுவும் மலையும் கடலும் கைகுலுக்கும் ஓர் ரம்மியமான உலகம். எங்கு நோக்கினும் பச்சை பசேல் என தென்னை மரங்கள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகள் என கண்ணுக்கு விருந்துகள் ஆங்காங்கே. சிறிதும் பெரிதுமாக எத்தணை தீவுகள் என சரியாக தெரியவில்லை, அவ்வளவு தீவுகளின் கூட்டம் தான் அந்தமான்.
இவற்றில் மனிதர்கள் வசிக்கும் தீவுகள் சொற்பமே. பல தீவுகளில் இன்னும் மனிதர்களை வேட்டையாடும் கொடூர காட்டுவாசிகள் வசிக்கிறார்களாம். ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப் பட்ட இந்த தீவுகளில் இருந்து இந்த காட்டுவாசிகளை சுதந்திரப் போராட்டக் கைதிகளைக் கொண்டு போரிட்டு விரட்டியடித்து முக்கிய இடங்களை கையகப் படுத்தி உள்ளனர்.
நமது தியாகிகளுக்காக கட்டப்பட்ட செல்லுலார் சிறைச்சாலையை சென்று பார்த்தோம். அங்கே அவர்கள் பட்ட கொடுமைகளை ஒலி ஒளி காட்சியாக காட்டுகிறார்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
நிக்கோபாருக்கு முன்பு ராஸ் எனும் தீவு தான் தலைநகரமாக இருந்திருக்கிறது. பின்பு அந்த தீவு கடலில் மூழ்க துவங்குவதாக சொல்லி நிக்கோபாருக்கு மாற்றி இருக்கிறார்கள். அந்த சிதிலமடைந்த தீவினைப் பார்க்க சிறியதொரு கப்பலில் சென்றோம். அங்கே ஆங்கிலேயர் பயன்படுத்திய பேக்கரி, நீச்சல் குளம், தேவாலயம் மற்றும் குடியிருப்புகள் என அனைத்தும் பாழடைந்து இருந்தாலும் உள்ளது உள்ளபடியே பராமரித்து வருகிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய இடம்.
அவ்வளவு அழகான அந்தமானில் எங்கு சென்றாலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நேர்த்தியான “இயற்கையை” இயற்கை மாறாமல் பராமரிக்கின்றனர். 
இவ்வளவு அழகு இருந்தால் கண்டிப்பாக ஆபத்தும் இருக்கும் தானே????
Monday, August 2, 2010

கண்ணீர் தேசம்

(குறிப்பு: அழகப்பா பல்கலையில் பயின்ற பொழுது, 1999 வருட ALUTES நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில், இயக்குனர் "முள்ளும் மலரும்" மகேந்திரன் அவர்களால் தேர்வு செய்யப் பட்டு, அவரது கரங்களால் முதல் பரிசை பெற்ற எனது (முதல்) படைப்பு இது. போட்டி களத்தில் கொடுக்கப் பட்ட “மீன் கூடையுடன் செல்லும் பெண்களின்” ஓவியத்தை மையமாக வைத்து அரை மணி நேரத்தில் எழுதப் பட்டது.)

"ஏலா...மரியதாசு" என்றவாறு ஏஜெண்ட் சந்தானம் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். மரியதாசுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். துடுப்பு வளித்து இறுகிய கைகள் ஆனால் வயிறு மட்டும் இருக்கிறேனா இல்லையா என பட்டிமன்றம் நடத்தியது.

"அய்யா!...ஏசெண்டய்யா...வாங்கய்யா..." வயதின் காரணமாக தடுமாறி எழுந்தார் மரியதாசு. "எங்கலெ வட்டிக் காசு...? அசலெத்தான் குடுக்க முடியல. வட்டியவாது ஒழுங்கா குடுக்கலாமுலெ?" தீக்குச்சியால் பற்களின் இடுக்கை சுத்தம் செய்தபடி சந்தானம் கேட்டான். பான்பராக்கோ, வெற்றிலையோ அவனது வெண்ணிற பற்களை செந்நிறமாக்கியிருந்தது.

"அய்யா...! கொஞ்சம் பொறுத்துக்கங்க... சின்னவம் இப்பதாம் பண்ணன்டாங் கிளாசுக்கு வந்துருக்காம். பிரசிடெண்டு அய்யாகிட்டம் சொல்லியிருக்கேம்... இந்த வருசம் படிப்பு முடுஞ்சதும் வேலெ வாங்கி தரதா சொல்லியிருக்காரு" சமாதனப்படுத்தினார்.

"அட போய்யா...! இவம் எப்ப சம்பாருச்சு, எங்கடனெ அடெய்க்கிறது? இதெல்லாம் கதெய்க்காவுமா...? இவனும் மூத்தவம் மாதிரி ஆயிட்டானா...என்ன பண்ணுவெ..?"

"அய்யா...." அலறினார் மரியதாசு "வேணாம்யா...ஒம்வாயாலெ அப்புடி சொல்லாதேயும்" கண்களில் நீர் கோர்த்தது.

"ஹ்ம்ம்ம்... மவராசன்...போயி சேந்து, இத்தோட வருசம் ரெண்டாச்சு...அவம் மட்டும் இருந்துருந்தா, குடும்பம் இன்னெலமெய்க்கி வந்துருக்குமாயா..." அரற்றியபடியே விசும்பத் ஆரம்பித்தார்.

"அட கடலுக்குப் போனவம், மீனோட வருவாம்னு பாத்தா... பொணமாயில்லா வந்தாம். வாடகெய்க்கு கொண்டு போன எம் படகெயுமில்லா படுபாவி சிங்களெய்ங்க கொண்டு போயிட்டானுவ... இப்பம் வாடகெ வளந்து, அசலும் வட்டியுமா பதினெஞ்சாயிரம் நிக்கு" சாமாதனப் படுத்தினான்.

"யாருய்யா நெனெச்சா? தொழிலுக்குப் போன எம்மவனெ இப்புடி சிங்களுனுங்க ஈவு எரெக்கமுல்லாமெ சுட்டுப் போட்டுட்டானுவலே..." பழுப்பு ஏறிய வேட்டியால் மூக்கை சிந்திக் கொண்டார். "அதாம்யா, ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சின்னவனெ இந்த பாழாப்போனக் கடலுக்கு அனுப்ப வேணாமுன்னு" தீர்க்கமாக சொன்னார்.

"எய்யா.. மரியதாசு... நல்லா யோசிச்சு பாரு... கடலுதாம் நமக்கு தெய்வம்... அதுலெ போறவனெல்லாமா சாவுறானுக? உம்மவன் சின்னவம் படுச்சி வேலெய்க்கு போயி எம்புட்டு சம்பாருச்சுறப் போறாம்..? நீயொண்ணும் ஒண்டிக் கட்டயில்லெ... வயசுக்கு வந்த பொட்ட புள்ளம், அப்புறம் ஒம் பொண்டாட்டி, இத்தென பேரும் அவம் ஒருத்தனெ நம்பி... அட... எங்கடனெ வுட்டுத் தள்ளும்யா... ஒம்மவ மேரி கலியாணத்துக்கு எதுவும் சேக்க வேணாமா..?"

" ........................"

வெளியே சென்றிருந்த மேரியும், அம்மாவும் உள்ளே வந்து ஏஜெண்டைப் பார்த்து திடுக்கிட்டனர். தலையிலிருந்த இறக்கிய மீன் கூடையின் மணம் வீட்டை இலவசமாய் நிறைத்தது. வெயிலின் கொடுமை கண்களை இருட்ட, அம்மா மண்பானை நீரை ஒரு செம்பு எடுத்து மடக்... மடக்... எனக் குடித்தாள். தண்ணீர் வழிந்து அவள் தொண்டையை கொஞ்சம் குளிர வைத்தது.

ஏஜெண்ட்டிடம் திரும்பி "வாங்கய்யா.... இப்பதாம் வந்தீயளா..?" புடைவை தலைப்பால் ஈரத்தை ஒத்திக் கொண்டாள்.

"ஏம்மா! ஒம்புருசன் ஒரு வெவரங்கெட்ட ஆளாயிருக்காம்... சின்னவனெ வேற வேலெய்க்கி அனுப்ப போறாராமுலெ.. இவெம் படிப்புக்கு எம்புட்டு சம்பாருச்சுறப் போறாம்? நீயாவது எடுத்து சொல்லி எம் படகுக்கு அனுப்பி விடு... தொழில பழகட்டும்.... நாம் பாத்து போட்டு தரேன்"

"வேணாமுய்யா... புள்ளெய்ங்க ஒவ்வொரு மொறெ கடலுக்கு போகும்போதும் உசுரு எம்ம நெஞ்சுல இல்லம்யா... எங்கய்யுலெ இருக்குயா... சின்னவனெயும் அந்த படுபாவிகளுக்கு தூக்கிக் குடுக்கம் வேணாமுயா"

அம்மா சொல்வதைக் கேட்ட மேரியும் "ஆமாயா, கஞ்சியோ ... கூழோ ... நானும் அம்மயும் மீனெ வித்து ஊத்துறம். அவம் படுச்சு சம்பாருச்சு எங்களெ காப்பாத்தட்டும்" உறுதியாக சொன்னாள்.

" சரி ... சின்னவம் வந்ததும் சொல்லி பாருங்க... இப்பம் அவனுக்கு அரப்பருட்ச லீவுதான...? ரெண்டு நாளு வந்து பாக்கட்டும் . . அப்புறம் ஒம்ம இஷ்டம்" பதிலைக் கூட எதிர்பாராமல் வேட்டியின் தலைப்பை கால்களால் லாவகமாக கைக்கு கொண்டு வந்தபடி விறுவிறுவென நடந்த ஏஜெண்ட்டை அம்மாவும் மகளும் நடுங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மரியதாசு தரையில் அமர்ந்து கிழிந்த வலையை புலம்பியபடியே மீண்டும் தைக்கத் தொடங்கினார்.

ஆளரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார், எதிரில் சின்னவனும் பக்கத்து வீட்டு சுந்தரும் நின்றிருந்தனர். இருவரும் பள்ளித் தோழர்கள், சிறுவயது முதலே ஒன்றாய் வளர்ந்ததால் அப்படியொரு நெருங்கிய நட்பு.

"எப்போவ் .... ஏசெண்டய்யா உங்கிட்டம் என்னவோ சொல்லியிருக்காராமுலெ? இப்பதாம் வழியில பாத்தேன் .... என்ன சொன்னாரு...?" கண்களில் ஆர்வம் மின்னியது.

"ஏலா ... நீயி ... நீ ... கடலுக்குப் போரீயாலெ?" அப்பா தடுமாறி முடிக்கு முன்னே " இல்லம்பா ... நான் படிக்கேன்" ஆர்வம் கலவரமாய் மாறியது.

"அட ... அதுக்கில்லல்லா ... இப்பம் ஒனக்கு லீவு தான? ஒரு ரெண்டு நாளய்க்கு போயி பாரும்லா ... புடிக்காட்டி வேணாம்"

அப்பாவைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது. "ஏலேய், இப்பம் லீவுதனல்லா ... நானும் வரேன் ... வாலா ... ரெண்டு பேருமா போவம்" ஆதரவாய் கைகளைப் பற்றி சுந்தர் சம்மதிக்க வைத்தான்.

அம்மாவும், மேரியும் பெரும்பாலும் கடற்கரையில் மாதா குருசடியிலேயே அமர்ந்து இரண்டு நாளையும் கழித்தனர். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் மல்க, மேரி மாதா முன் இருவரும் மணிக்கணக்காக வேண்டிக் கொண்டனர். மூன்றாம் நாள் விடியலிலேயே எழுந்து தலையில் மீன் கூடையை சுமந்தபடி சின்னவனை எதிர்பார்த்து கடற்கரைக்கு வேகவேகமாக நடந்தனர்.

எதிரே டீக்கடையிலிருந்து சுந்தரின் அப்பா பதட்டத்துடன் ஓடிவந்தார். அவரின் பரபரப்பைப் பார்த்ததும் இருவருக்கும் வயிற்றில் அமிலம் சுரந்தது.

"மோசம் போயிட்டளா .... மோசம் போயிட்டம் ... பேப்பர்ல இப்பதாம் பாத்தேன் ... நேத்தும் ரெண்டு படகெ புடுச்சு ஆளுவள சுட்டுப் புட்டானுவளாம்... எந்த படகுனு தெரியலயே மகமாயி" தலைதெறிக்க ஓடினார்.

"அய்யய்யோ .... அய்யய்யோ ... இந்த பாவி மனுசம்கிட்ட தல தலயா அடுச்சுக் கிட்டம் ... கேக்காமெ பச்ச புள்ளயெ அனுப்புச்சானே .... எம்புள்ளய்க்கி என்னாச்சோ...? ஏட்டி ... சீக்கிரம் வாடி ..." மகளை கூட எதிர்பாராமல் கடற்கரைக்கு ஓடினாள்.

தூரத்தில் ஒரு படகு கரை வருவது தெரிந்ததும் இருவரின் கால்களும் இயந்திரத்தனமானது. படகில் இருந்தவர்களிடம் "எய்யா... எம்புள்ளயளெ பாத்தீயளா? ... என்னென்னமோ சொல்றவுகளே??" மாரில் அடித்துக் கொண்டு கதறிய அம்மாவை, கண்ணீரும் கம்பலையுமாய் மேரி தேற்றிக் கொண்டு இருந்தாள்.

"என்னவோம்மா ... நம்ம பொழப்பு நாயி பொழப்பா போச்சு ... எப்பவும் சிங்களுனுங்கதாம் சுடுவானுவம் ... இப்பம் நம்ம கடல் போலீசே ஆள் தெரியாமெ சுட்டுப் புட்டானுவம் ... எந்த படகுனு சரியா தெரியலெ ... ரெண்டு ஆளுகளுக்கு உயிர் சேதமாம்" படகிலிருந்த பெரியசாமி சொன்னார். அவருக்கு இன்னும் நெஞ்சு படபடப்பு அடங்கவில்லை.

"அட .... நாசமா போறவனுவளே .... ஒங்களுக்கு மீன் புடிக்கத்தானம்யா கடலுக்குப் போறோம் ... நீங்களே சுட்டா எப்படிம்யா??? எம்மா ... வேளாங்கண்ணி தாயே!!! எம்புள்ளெய்க்கி எதுவும் ஆகிரக் கூடாது ... பத்தரமா கரை வரனும் .... அவம் ... வருவான் ... கண்டிப்பா வரு...." துக்கம் தொண்டையை அடைக்க புலம்பினாள். மேரியும், விசும்பியபடியே சின்னவனின் படகு வருகிறதா என கடலை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

கடல் அலைகள் மட்டும் அவர்களின் கால்களை ஆதரவாய் வருடி சென்று கொண்டு இருந்தது.